அண்ணா! முதல்வராக இருந்த காலத்தில்… அண்ணா பெட்ரோல் போடக்கூட காசில்லாமல் கஷ்டப்பட்டார் என அவரோடு இருந்த அதிகாரி சுவாமிநாதன் எழுதி இருக்கிறார்! அண்ணா இறந்த பொழுது,
நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கியில், அவரது கணக்கில் ₹.5000 மட்டும் கையிருப்பு இருந்ததாகத் தகவல்!
எழுத்தாளர் ஜெயகாந்தன்’அண்ணா நீங்கள் எழுதுவது சிறுகதையே அல்ல’ என்று விமர்சித்தபோது கூட,
ஆம் என்று ஒப்புக் கொண்ட பெருந்தகை மனிதர்! நேரு ஒரு முறை நான்சென்ஸ் என்று சொன்னபோது..
“அவர் கட்டிமுடிக்கப்பட்ட கோபுரம், நாங்கள் கொட்டிக்கிடக்கிற செங்கல்!” என நாகரிக வார்த்தை மட்டுமே பயன்படுத்தினார்.
19 வருட பிரிவின் போது கூட,பெரியாரை விமர்சித்தது கிடையாது!இவர்களின் விரல்களை வெட்டுவேன்
என்று சொன்ன காமராஜரைக் கூட ‘குணாளா குலக்கொழுந்தே’ என்றுதான் கூறியிருக்கிறார்!
ஈவிகே சம்பத், ‘தோழர் அண்ணாதுரை’ என்று கூறியபோது கூட, “ஈவிகே. சம்பத் ஒரு வைரக் கடுக்கன், காது புண்ணாகி விடும் என்று கழட்டி வைத்திருக்கிறேன்” என்றவர்! அண்ணா முதலமைச்சராக இருந்த காலத்தில், அவரோடு பேசிக் கொண்டிருந்த உயர் அதிகாரி ஒருவர் வெளியில் செல்ல, தான் மறந்து போனதை அவரிடம் கூறவேண்டும் என்று எண்ணி அப்போது அண்ணாவோடு, கூட இருந்த சட்டமன்ற உறுப்பினரைப் பார்த்து ,
‘நீங்கள் வேகமாக சென்று அந்த அதிகாரியை அழைத்து வாருங்கள்’ என்று கூறினார்.உறுப்பினர் சற்று வேகமாக செல்லத் தயங்கி, கைத்தட்டி கூப்பிட்டு விட்டார்!
திரும்பி வந்த உயர் அதிகாரியைப் பார்த்து,’நான் உங்களை அழைக்கச் சொல்லவில்லை வேறொருவரை அழைக்கசொன்னேன். மன்னித்து விடுங்கள்’ என்று கூற, பிறகு அந்த சட்டமன்ற உறுப்பினரை பார்த்து, எனக்கு கை வலிக்கும் என்றா நீங்கள் கை தட்டினீர்கள்? அவர் ஐ.ஏ.எஸ் முடித்து நிரந்தர பதவியில் இருப்பவர். மீண்டும் நம்மை ஐந்தாண்டுகளுக்கு பிறகு மக்கள் தேர்ந்தெடுத்தால்தான் உண்டு’ என்று கூறி கடிந்து, உயர் அதிகாரிகளை எப்படி அழைப்பது என்ற நாகரிகத்தை சட்டமன்ற உறுப்பினருக்குச் சொன்னார்.
இப்பொழுது கவுன்சிலருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் நிலையே எப்படி இருக்கிறது என்பதும் நம் எல்லோருக்கும் தெரியும். காமராஜரும், பக்தவத்சலமும் தோற்கடிக்கப்பட, மக்களின் முன் நாம் மட்டும் எம்மாத்திரம் என வேதனைப்பட்டார்! கலைந்த தலைமுடியோடும், அழுக்கு வெள்ளை வேட்டி யோடும் மக்களிடம்,
“நான் வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன். நான்தான் தமிழகத்தின் முதல்வர்” என்று அடக்கத்தோடு கூறினார்.
சென்ற ஊர்களில் எல்லாம் தமிழர் பெருமையை ஓங்கச் செய்தவர். கேட்ட கேள்விகளுக்கெல்லாம்
தன் அறிவுத் திறத்தால் பதில் சொன்னவர்! ஆங்கிலத்திலும் அடுக்கு மொழி
பேசத் தெரிந்த அண்ணா! சுயமரியாதைத்திருமணங்கள் அண்ணா காலத்தில்தான் சட்டமாக்கப்பட்டது.
தாயாக நேசித்த தமிழ்நாட்டிற்கு, தமிழ்நாடு என்று பெயர் வைத்து அழகு பார்த்த தலைமகன் அண்ணா.
தமிழ், ஆங்கிலம் என இருமொழிக் கொள்கையை சட்டம் ஆக்கினார். கல்விக்காக காங்கிரசை விட ஏழுகோடி ரூபாய் அதிகம் ஒதுக்கியவர் அண்ணா. எதிரிகளைக் கூட நேசிக்கிற பண்புதான் அவரை எல்லோராலும் “அண்ணா” என்று ஏற்றுக்கொள்ள வைத்தது. இறக்கின்ற தருவாயில் கூட, “தி மாஸ்டர் கிறிஸ்டியன்” நூலை
வாசித்துக் கொண்டே இருந்தவர். அவர் இறந்தபோது தமிழகத்தில் மொத்தம் நாலரை கோடி மக்கள்.
அவரோடு இருந்தவர்களோஒன்றரை கோடி மக்கள் என அவருடைய இறப்பும் “கின்னஸ்” சாதனையானது!

குறைந்த காலமே முதல்வராக இருந்தாலும் இன்றுவரை எல்லா மக்கள் மனதிலும் நிறைந்தவர்தானே அண்ணா.
கொடிகளில் பறந்து கொண்டிருப்பவரா அண்ணா! கொண்ட கொள்கையில் நெருப்பாய் பூத்தவரே அறிஞர் அண்ணா!